இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து ஊறணி பாடசாலைக் காணி விடுவிப்பு!

ராணுவம் கையகப்படுத்தியிருந்த யாழ். வலிகாமம் வடக்கு ஊறணி பாடசாலைக் காணி, இன்று (திங்கட்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 வருடங்களாக படையினரின் கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த காணியை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டு வந்த கோரிக்கையின் பிரகாரம், இன்றைய தினம் இக் காணி விடுவிக்கப்பட்டது.

விடுவிக்கப்பட்ட 3.9 ஏக்கர் அளவுடைய காணி, யாழ். மாவட்ட ராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சியினால் எஸ்.முரளிதரனிடம் கையளிக்கப்பட்டது.

ஊறணி பகுதியிலுள்ள சில காணிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் அங்கு படிப்படியாக குடியேறி வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏதுவான நிலையில் பாடசாலை காணியையும் விடுவிக்க வேண்டுமென மக்கள் நீண்டகாலமாக கோரி வந்தமை குறிப்பிடத்தக்கது.