நம்பிக்கையில்லா தீர்மானம்: நடந்தது என்ன? விளக்குகிறார் சுரேஸ்!

சுமந்திரனின் ஊதுகுழலாக வெளிவரும் தீபம் பத்திரிகையில் மாகாணசபை விவகாரம் தொடர்பில் கற்பனைக்கதைகள் பிரசுரிக்கப்படவுள்ளதாக முன்கூட்டியே தகவல் விடுத்துள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன்.

வடமாகாண சபையில் தமிழரசுக்கட்சியால் கொண்டுவரப்பட்ட முதல்வர் மீதான நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்பாகவும் அதனை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவன் என்ற வகையிலும் நடைபெற்ற விடயங்களை சுருக்கமாக தெளிவு படுத்த விரும்புவதுடன் மூன்றாந்தரப்புக்களால் வரும் விசமத்தனமான செய்திகளை நம்பவேண்டாமெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலோட்டமாக பார்க்கின்ற பொழுது வடக்கு மாகாணசபை பிரச்சினையென்பது அமைச்சர்களின் மீதான விசாரணைக்கு இடையூறுகள் ஏற்படாமல் அவர்களின் உத்தரவாதத்தை முதலமைச்சர் கோரியதாகவும் அது தவறென்றும் சட்டத்துக்கு முரணானதென்றும் சுமந்திரனும், மாவைசேனாதிராசாவும் முன்னிலை வகித்து அவ்வாறு செய்ய முடியாது என்று கூறியது மாத்திரமல்லாமல் தமக்கு சாதகமான தமிழரசுக்கட்சி உறுப்பினர்களைத் திரட்டி முதல்வர் மீதான ஒரு நம்பிக்கையில்லாத்தீர்மானத்தை ஆளுநரிடம் கையளித்தார்கள்.

ஆளுங்கட்சி மாகாணசபை உறுப்பினர்களின் கோரிக்கையின் பிரகாரமே அமைச்சர்கள் மீதான ஊழல் நடவடிக்கைகளை ஆராய்வதற்கான விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதன் முடிவில் அமைச்சர்கள் ஐங்கரநேசன் மற்றும் குருகுலராசா மீதும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டது. ஏனைய இரு அமைச்சர்களான வைத்தியர் சத்தியலிங்கம் மற்றும் டெனிஸ்வரன் ஆகியோருக்கு எதிரான சாட்சியங்கள் சமூகமளிக்க முடியாததால் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை.

அரச உத்தியோகத்தர்களான சாட்சிகள் தாங்கள் பழிவாங்கப்படுவோமென்று அஞ்சியதால் சாட்சிகளுக்கான பாதுகாப்புக்கான உத்தரவாதம் கோரப்பட்டது. உத்தரவாதம் அளிக்காமையால் சாட்சியங்களால் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாமையாலும், முக்கியமான சாட்சியான அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்கு சென்றிருந்ததனாலும் விசாரணைக்குழுவினால் சாட்சியங்களின் முழுமையான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆகவேதான் குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் மீது ராஜினாமா கடிதங்களை கோரிய முதலமைச்சர் ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற வேண்டுமென்றும் விசாரணை சுமூகமாக நடைபெறுவதற்கு இரு அமைச்சர்களையும் ஒரு மாதத்திற்கு அமைச்சுக்கடமைகளிலிருந்து விலகியிருக்குமாறு கோரினார். இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. இதில் என்ன சட்டப்பிரச்சினை இருக்கிறது என்றும் புரியவில்லை.

விசாரணை முடியும்வரை விலகியிருக்கத்தயார் என்று நேர்மையான அமைச்சர்களால் ஏன் சொல்ல முடியவில்லை.

இங்கு தான் தமிழரசுக்கட்சியின் தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் முதலமைச்சருக்கெதிராக போர்க்கொடி தூக்கத் தொடங்கினர். அவ்வாறு அமைச்சுப்பதவியிலிருந்து விலகியிருக்க முடியாது என்று கூறினர். முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தயார் செய்தனர்.

சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் ஆளுநரிடம் சென்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கையளித்தனர்.

இதன் பின்னர் சம்பந்தன் தொலைபேசி வழியாக முதலமைச்சரை தொடர்பு கொண்டு இரு அமைச்சர்களையும் தமது கடமைகளிலிருந்து நிறுத்திவைப்பது தவறென்றும் அவர்களை மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளுமாறும் ஆலோசனை கூறினார். அத்துடன் தான் தொலைபேசியில் கூறியவற்றை கடிதமாகவும் முதலமைச்சருக்கு அனுப்பிவைத்தார். இந்த இடத்தில் திரு சம்பந்தனுக்கும் முதலமைச்ருக்குமிடையில் ஒரு கடிதப்போராட்டமே நடைபெற்றது. சம்பந்தனின் கடிதத்திற்கு முதல்வர் பதிலனுப்ப முதல்வரின் கடிதத்திற்கு சம்பந்தன் பதிலனுப்ப மீண்டும் சம்பந்தனின் கடிதத்துக்கு முதல்வர் பதிலனுப்ப இது ஒரு முடிவற்ற கடிதப்போராட்டமாக போய்விடுமோ என ஐயுறவேண்டியிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் பல நிகழ்வுகள் நடந்தேறின. நூற்றுக்கணக்காக ஒன்றுகூடிய இளைஞர்கள் ஊர்வலமாகச்சென்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கெதிராக கோசங்களை எழுப்பியதுடன் முதல்வர் விக்கினேஸ்வரன் தான் தொடர்ந்தும் முதல்வராக இருக்கவேண்டுமென்றும் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவை 16 ஆம் திகதியன்று வடமாகாணம் முழுமையும் கடையடைப்புப் போராட்டத்திற்கான அறைகூவலை விடுத்ததுடன் போராட்டமும் வெற்றி பெற்றது. அது மாத்திரமல்லாமல் நல்லூரில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள், பல்களைக்கழக மாணவர்களும் முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு ஊர்வலமாகச்சென்று முதல்வருக்கான தமது ஆதரவை தெரிவித்தனர்.

இந்த சமயத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் முதல்வருக்கான தமது ஆதரவை தெரிவித்தன.அது மாத்திரமில்லாமல் இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன. இது தொடர்பாக எமது கட்சியின் நீர்வேலி அலுவலகத்தில் மேற்கண்ட மூன்று கட்சிகளின் தலைவர்களும் ஒன்றுகூடி சந்திப்பொன்றை நிகழ்த்திருந்தனர். இதில் கலந்து கொண்ட கட்சிகள் தங்களது கோணங்களிலிருந்து பிரச்சினையின் ஆழ அகலத்தை அலசியதுடன் திரு விக்கினேஸ்வரன் அவர்கள் தொடர்ந்தும் முதலமைச்சராக இருக்கவேண்டுமென்பதை ஒரே குரலில் வலியுறுத்தினார்கள்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைப் பொறுத்தவரையில் இந்தப்பிரச்சினையென்பது தமிழரசுக்கட்சி சில அமைச்சர்களை பாதுகாப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி மாத்திரமல்ல முதலமைச்சரை அலுவலகத்தை விட்டு வெளியேற்றுவதில் அவர்கள் குறியாக இருந்தார்கள். தமக்குத் தோதான ஒரு டம்மியை முதலமைச்சராக்க போராடினார்கள்.

ஏனென்றால் வட கிழக்கு இணைப்பு அற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை, இறமையை ஏற்றுக்கொள்ளாத பௌத்தத்திற்கு முதலிடம் வழங்குகின்ற ஒற்றையாட்சி அடிப்படையிலான தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் சாசன சீர் திருத்தமென்றை தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி, தமிழரசுக்கட்சி ஆகியன இணங்கியுள்ளன. இச் சூழ்நிலையில் வட கிழக்கில் நிலைமைகளை தமது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலமே உப்புச்சப்பற்ற இத்தீர்மானத்தை தமிழ் மக்கள் மீது திணிக்கமுடியும். வடக்கு மாகாண முதல்வராக திரு விக்கினேஸ்வரன் அவர்கள் இருந்தால் அதற்கான எதிர்ப்பு என்பது பலமாக காட்டப்படுவதுடன் மாகாணசபையில் இதற்கெதிரான பல தீர்மானங்களும் நிறைவேற்றப்படும். இதனை தவிர்க்கவேண்டுமாக இருந்தால் இன்றைய முதலமைச்சரை அகற்றி ஒரு டம்மியை உட்காரவைக்கவேண்டிய அவசியம் தமிழரசுக்கட்சிக்கு எழுந்தது.

அரசின் ஆதரவுடன் சுமந்திரன், மாவைசேனாதிராஜா போன்றோரால் முன்னின்று நடத்தப்பட்ட இந்த சதி நடவடிக்கையானது வடக்கு மக்களின் பேரெழுச்சி காரணமாகவும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி தவிர்ந்த கட்சிகளின் ஆதரவின்மை காரணமாகவும்,மத குருமார்களின் ஒத்துழைப்பின் காரணமாகவும் சதி நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழரசுக்கட்சி தற்காலிகமான ஒரு தோல்வியை சந்தித்திருந்தாலும் மாகாணசபையை சீராக நடாத்த அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே. மாகாணசபையை சீர்குலைத்து முதலமைச்சர் நிர்வாகத்திற்கு லாயக்கற்றவர் என்ற சூழ்நிலையை உருவாக்கி அவர் மீது சேறடிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வார்கள் என்றே எதிர் பார்க்கிறேன்.

இந்தத் தருணத்தில் முதல்வருக்கும் கட்சித்தலைவர்களுக்கும் இடையில் எவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. யார் என்ன பேசினார்கள் என்னென்ன வார்த்தைப்பிரயோகங்களை பாவித்தார்கள் போன்ற விடயங்களை எழுதுவதனூடாக தாங்கள் பேச்சுவார்த்தையின் பல இரகசியங்களை வெளியிடுவதாக நினைத்து உண்மைக்குப்புறம்பாகவும் திரித்தும், கூட்டிக்குறைத்தும் தாம் விரும்பியவாறும் சமூகவலைத்தளங்களில் செய்திகளை வெளியிட்டுவது மாத்திரமல்லாமல் சில அரசியல்வாதிகள் சார்பாக வருகின்ற பத்திரிகைகளிலும் கற்பனைக்கட்டுரைகளை எழுதி திருப்பதிப்பட்டுக்கொள்கிறார்கள்.

இந்தப்பிரச்சினைகளை தீர்ப்பதில் பங்கேற்றவன் என்ற அடிப்படையில் மூன்றாந்தரப்புக்களால் வரும் விசமத்தனமான செய்திகளை நம்பவேண்டாமெனவும் கேட்டுக்கொள்கிறேனென சுரேஸ் தெரிவித்துள்ளார்.